ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆன்லைன் கல்வி ரேடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியோ மூலம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களும் சாதாரண 2ஜி அலைவரிசையில் இயங்கக்கூடிய அலைபேசியில் ஆன்லைன் கல்வி கற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் போன் மூலமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் போதுமான இணையம் அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பது மிகவும் சிரமமாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ரேடியோ மூலம் ஆன்லைனில் பாடமெடுக்கும் புதிய முயற்சியை கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதிக்கு உட்பட்ட கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா மேற்கொண்டுள்ளார்.