Tuesday, 9 January 2018

தேர்வுக்கு முன், 'லேப்டாப்' வினியோகம்; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் அபாயம்






பொது தேர்வுக்கு முன், பிளஸ் 2 மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு, 'லேப் டாப்' வழங்கும் முடிவால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன், லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்கள், தேர்வுக்கு முன் பாடங்களை படிக்காமல், லேப்டாப்பில், தேவையற்ற செயல்களால் நேரத்தை செலவிட்டனர்.

அதனால், அரசு பள்ளி மாணவர்களின் பொது தேர்வு மதிப்பெண் கடுமையாக சரிந்தது.இதையடுத்து, பொது தேர்வு முடிந்த பின், லேப்டாப் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதன்பின், 'லேப்டாப்' பயன்பாடு நேரம் குறைந்து, அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றதை, ஆய்வுகளில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல், பொது தேர்வுக்கு முன், 'லேப்டாப்' வழங்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. நீட், ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வு பயிற்சி பெறும் மாணவர்கள், 73ஆயிரம் பேருக்கு, புத்தகங்கள் அச்சிடும் பணி முடியவில்லை.

எனவே, டிஜிட்டல் புத்தகத்தை, லேப்டாப்பில் படிக்கும் வகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த முடிவால், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவிலும், பெரும் சரிவு ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பாடங்கள் முடியும் நிலையில் உள்ளன.

இந்த வாரம் முதல், திருப்புதல், மாதிரி தேர்வுகள்போன்றவற்றை நடத்தி, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டி உள்ளது.நீட், ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றால், பிளஸ் 2 பொது தேர்விலும் கட்டாயம், 50 முதல், 75 சதவீதம் வரை, மதிப்பெண் பெற வேண்டும்.


எனவே, பொது தேர்வு மதிப்பெண்ணும், நுழைவு தேர்வுகளுக்கு முக்கியம்.இந்நிலையில், தேர்வுக்கு முன், லேப்டாப் வழங்கினால், மாணவர்களின் கவனம் சிதறி, லேப் டாப்பில் அதிக நேரம் செலவிடுவர்.

அதில், டிஜிட்டல் புத்தகத்தை படிப்பதை விட, இணையதளத்தை பயன்படுத்துவது, சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பது, லேப்டாப்பின் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது என, தங்கள் நேரத்தை வீணடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, தேர்வுக்கு முன் லேப்டாப் வழங்கும் திட்டத்தை, கல்வித்துறை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-தினமலர்

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here