Tuesday, 9 January 2018

பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் நடராஜா சர்வீஸ்!சென்னை அருகே 7 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்:மனு கொடுத்தே மண்டை காய்ந்த கிராமவாசிகள்

சென்னை அருகே, ஏழு ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால், 10 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், புத்தகச் சுமையுடன், பல கி.மீ., துாரத்திற்கு, நடந்தே பள்ளி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. இந்த கிராமங்களின் முதியவர்கள், விவசாயிகளுக்கு, நடந்து நடந்து பாதம் தேய்ந்து போன நிலையிலும், பெயருக்கு ஒரு பேருந்தையாவது இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மட்டும் இன்னும், மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், காரனோடையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் இருப்பது, ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை. இந்த பகுதி, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகவும் உள்ளது.இந்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலையில் இருந்து பிரியும், பிரதான சாலையில், 12 கி.மீ., துாரம் பயணித்தால், மீஞ்சூரை அடையலாம். மீஞ்சூர் செல்ல, இதுவே எளிதான வழி என, கூறப்படுகிறது.


10 கிராமங்கள்


இந்த கூட்டுச்சாலையில் உள்ள, நெடுவரம்பாக்கத்தில் இருந்து, கிளை சாலை ஒன்று பிரிகிறது. இச்சாலை வழியாக சென்றால், ஆண்டார்குப்பம் வழியாக, பொன்னேரியையும் எளிதாக

அடையலாம்.இந்த சாலையில், அழிஞ்சிவாக்கம், இருளிப்பட்டு, சத்திரம், ஜெகன்னாதபுரம், இனாம் அகரம், குதிரை பள்ளம், கெங்கையாடி குப்பம், நெடுவரம்பாக்கம், சிறுவாக்கம், மேட்டுப்பாளையம் என, மீஞ்சூர் வரை, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.


இந்த கிராமவாசிகளுக்கு பிரதான தொழில் விவசாயம். காய்கறி, பூ, கீரை போன்றவை, இங்கு பயிரிடப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ - மாணவியர், 2,500க்கும் மேல் இருப்பர்.


தலையில் சுமந்து


இவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர், பொன்னேரி ஆகிய பகுதி களுக்கு தான் செல்ல வேண்டும்.அதே போல, விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர், கட்டுமான தொழிலாளர்கள், முதியோர் என, கிராமங்களில் வசிக்கும், அனைத்து மக்களும்...உரம், கட்டுமான பொருட்களை வாங்க, ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, காரனோடை, பொன்னேரி, மீஞ்சூர், ஆகிய பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.


முதியோர், இலவச பஸ் பாஸ் பெறவும், வங்கிகளுக்கு சென்று, ஓய்வூதியம், உதவித்தொகை ஆகியவற்றை பெறவும், மீஞ்சூர், பொன்னேரி, காரனோடை ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்த கூட்டுச் சாலை வழியாக, மீஞ்சூரில் இருந்து செங்குன்றம் வழியாக கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்ட, தடம் எண், 558 எல் மாநகர பேருந்தை, ஏழு ஆண்டுகளுக்கு முன், எந்த அறிவிப்போ, காரணமோ இல்லாமல், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென நிறுத்தினர்.

இதனால், ஏழு ஆண்டுகளாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், விவசாயிகள், முதியவர்கள், கால்நடையாகவே, அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

அவ்வப்போது, ஊருக்குள் வந்து பயணியரை இறக்கி, திரும்பும் ஆட்டோ ஓட்டுனர்கள், இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் ஓட்டிகள், மனிதாபிமானத்துடன், தாங் கள் போகும் வழியில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளை, ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை வரை அழைத்து செல்கின்றனர்.ஜெகன்னாதபுரத்தில் உள்ள, ரேஷன் கடைக்கு சென்று, உணவுப்பொருட்களை வாங்குவோர், அவற்றை, 3 முதல், 5 கி.மீ., வரை, தலையில் சுமந்து செல்கின்றனர். கோடை வெயில், மழையின் போது, கிராம மக்கள் மிகவும் தவிக்கின்றனர்.


தங்கள் கிராமங்களை இணைக்கும் வகையில், மீண்டும் பேருந்து இயக்க, குறை தீர்க்கும் கூட்டங்களிலும், மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்திலும், மனு கொடுத்து, கொடுத்து, கிராம மக்கள் ஓய்ந்தேவிட்டனர்.ஆனால், அதிகாரிகள் தான் இன்னும் மனம் இறங்கவில்லை என, புலம்புகின்றனர் கிராமவாசிகள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன், பேருந்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

மாநகர போக்குவரத்து கழகத்தில், அப்போது பணியாற்றிய அதிகாரிகள், தற்போது இல்லை. இதனால், கிராம மக்கள் தற்போது மனு கொடுத்தால், பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தானுலிங்கம், மேலாண்மை இயக்குனர், மாநகர போக்குவரத்து கழகம்


நாங்கள், ஜெகன்னாதபுரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு, 3 கி.மீ., துாரம், நடந்து சென்று வருகிறோம். புத்தகப் பையை சுமந்து கொண்டு நடப்பதற்கு, கஷ்டமாக உள்ளது. மழைக்காலங்களில், பள்ளிக்கு பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், சோழவரம், பாடியநல்லூர், செங்குன்றத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வர வேண்டும். அவர்கள், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை வரை, 5 கி.மீ., நடந்து சென்று, பஸ் பிடித்து செல்கின்றனர்.பள்ளி மாணவர்கள், சத்திரம்


சிறு விவசாயிகளான எங்களுக்கு, சொந்த வாகன வசதி இல்லை. விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல, போக்குவரத்து செலவு அதிகமாகிறது. எங்களுக்கு உதவ, மினி பஸ் விடலாம். அதை, அழிஞ்சிவாக்கத்தில் இருந்து மீஞ்சூருக்கும், இடையில் நெடுவரம்பாக்கம் வழியாக ஆண்டார்குப்பத்திற்கும் இயக்கலாம்.விவசாயிகள்ஜெகன்னாதபுரம்


ஏழு ஆண்டுகளுக்கு முன், எங்கள் கிராமங்கள் வழியாக மீஞ்சூருக்கு இயக்கப்பட்ட, மாநகர பேருந்தின் படிகட்டில் பயணித்த பள்ளி மாணவன், தவறி விழுந்து இறந்தான். அதன்பின், அந்த பேருந்து நிறுத்தப்பட்டது. கிராமத்தினர், பலமுறை மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.வி.பாரதிராஜா, 33. ஆட்டோ ஓட்டுனர் இனாம் அகரம்


எங்க ஊருக்குள், பஸ்சை பார்த்து பல வருசமாச்சு. முதியோர் உதவித்தொகை வாங்கவும், ஆஸ்பிடலுக்கு போகவும், வயதான காலத்தில், 4 கி.மீ., துாரம் நடந்து போய்தான் பஸ் பிடிக்கணும். எங்க ஆயுள் முடியறதுக்குள் பஸ் விடுவாங்களான்னு தெரியல. ஆட்டோகாரங்கதான் பரிதாபப்பட்டு, எங்களுக்கு உதவி செய்றாங்க. தேர்தலுக்கு, ஓட்டு கேட்டு வந்தவங்க, எட்டி கூட பார்க்காமல், எங்களை கால்நடையாகவே ஆக்கிட்டாங்க. மினி பஸ்சாவது விடுவாங்களா?

சு.சம்பூரணம், 70. ஜி.இந்திராணி, 75.ஜெகன்னாதபுரம்


ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி, உயர்நீதிமன்றம் - இனாம் அகரம் வரை, 58 எப்., பஸ் சர்வீஸ் இருந்தது. அதன் பின் மீஞ்சூர் - கோயம்பேடு வரை, டி -41 பஸ்சும், அப்புறம், 558 எல் பஸ்சும் விட்டாங்க. திடீர்ன்னு எல்லா பஸ்சையும் நிறுத்திட்டாங்க. ஏழு வருசமா பஸ் இல்லை.

அதிகாரிகள் எங்களை, மனுஷங்களாகவே மதிக்கவில்லை.

எம்.மகாலிங்கம், 65.

ஜெகன்னாதபுரம்


எம்.எல்.ஏ.,ன்னா யாருங்க?

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட இந்த கிராம மக்களிடம், தங்கள் ஊருக்கு பஸ் வசதியில்லை என்பதை, தொகுதி, எம்.எல்.ஏ.,விடம், புகார் தெரிவித்தீர்களா? எனக் கேட்டபோது, 'எம்.எல்.ஏ.,ன்னா யாருங்க? அவரெல்லாம் ஓட்டு கேட்டு வந்ததோட சரி, அதன்பின், இந்த பக்கமெல்லாம் எட்டிக் கூட பார்ப்பதில்லை' என, கிராம மக்கள் அப்பாவியாக தெரிவித்தனர்.

பொன்னேரி, எம்.எல்.ஏ.,வாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிறுணியம் பலராமன் உள்ளார். அவர் தான் திருவள்ளூர் மாவட்ட செயலராகவும் இருக்கிறார். மாவட்ட செயலர், எம்.எல்.ஏ.,

அந்தஸ்தில் உள்ளவர் நினைத்தால், இந்த கிராமங்களுக்கு பஸ் வருமா? வராதா?

-தினமலர்

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here