Thursday, 19 April 2018

சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவை வெளியிட வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி

கடந்த 2017ம் ஆண்டு தகுதி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களின் தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வலியுறுத்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை சிறப்பாசிரியர்கள் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதனை தொடர்ந்து 15 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து சிறப்பாசிரியர்கள் கலைந்து சென்றனர். கடந்த 2017ம் ஆண்டு உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. இத்தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிந்ததும், இரண்டு மாதங்களில் முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.


 இதையடுத்து தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும், அதே போன்று ஓ.எம்.ஆர்.தாளின் நகலையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பாசியர் தேர்வு எழுதியவர்கள் நான்கு முறை பள்ளி கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தனர். ஆனால் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிடுவதற்காக, கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவுக்கு வந்தனர்.   அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல் கிடைத்ததும், கோபி போலீசார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி, அனைவரையும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போராட்டம் நடத்த வந்தவர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது மற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதில் உள்ள வேகம், சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் அரசு காண்பிப்பதில்லை எனவும், இந்த பணியிடத்திற்காக தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் பேர் காத்திருப்பதாகவும் கூறினர்.

தேர்வு எழுதியவர்களில் பலர் 40 வயதை கடந்து விட்ட நிலையில் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம், அடுத்த 15 நாளில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும் எனவும், அப்போது ஓ.எம்.ஆர்.தாளின் நகலும் வழங்கப்படும். மேலும் ஜூன் மாதம் தேர்வு முடிவின் அடிப்படையில் வேலைவாய்ப்பிற்கான பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற சிறப்பாசிரியர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here