Tuesday, 24 July 2018

புதிய பாடத் திட்டம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.,

புதிய பாடத் திட்டம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன்.நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடையே பேசிய அவர்,  புதிய பாடத் திட்டங்கள் குறித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார்.  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா ஆகியோர் உடனிருந்தனர்.இதையடுத்து,  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பாடத் திட்டம் அமைந்துள்ளது. மாணவர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளன.  இழையோடும் தொழில்நுட்பம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

 





விரைவுக் குறியீடுகள் மூலம் நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில்,  அகில இந்திய அளவில் தமிழ்நாடு பாடப்புத்தகம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  மேலும்,  இந்தப் பாடத் திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.புதிய பாடத் திட்டத்தை மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லவும்,  அதை முழுமையாக உள்வாங்கி மாணவர்களைத் தயார் செய்யவும் ஆசிரியர்களுக்கு ஏராளமான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 
ஆண்டு முழுவதும் பலகட்டப் பயிற்சிகள் நடக்கும்.  அதில் முதல் கட்டப் பயிற்சி இப்போது நடைபெற்று வருகிறது.  பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு கருத்தாக்கம் அடிப்படையிலான பாடத் திட்ட நெறிமுறைகள்,  கற்பிக்கும் முறைகளை ஆசிரியர்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகின்றன.   மாணவர்களோடு கலந்து புதிய பாடத் திட்டத்தை சிறப்பாக எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள்,  விரைவுக் குறியீடுகள் போன்ற தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சிகள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கென புதிய பாடத்தில் பல பயிற்சிகள் குறித்து புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொரு பள்ளியிலும் புதிய வழிமுறைகளை ஆசிரியர்கள் கையாள்வதற்கு சுதந்திரமும்,  ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  புதிய பாடத் திட்டம் குறித்து தமிழகம் முழுவதும் 4 லட்சம் இடைநிலை,  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  ஒட்டுமொத்தமாக 70 முதல் 75 சதவீத ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 புதிய பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய,  தேசிய அளவில் என்சிஇஆர்டி,  சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள், பிற மாநில அளவில் உள்ள பாடத் திட்டங்களை ஆய்வு செய்து,  அதில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்து இடம்பெறச் செய்திருக்கிறோம்.
  
குறிப்பாக,  சிங்கப்பூர் நாட்டின் தமிழ், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அந்தப் பாடத் திட்டத்தின் பயிற்சிகள் மற்றும் அணுகுமுறைகளை தேவைக்கேற்ப எடுத்து புதிய பாடத் திட்டத்தில் பயன்படுத்தியுள்ளோம். இந்த புதிய பாடப் புத்தகத்தில் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.   இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாடப் புத்தகம் நோக்கி வருபவர்களை ஆசிரியர்கள் தக்கவைத்து,  அவர்களுக்கு கற்பித்தல் முறையை இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் உதயச்சந்திரன்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here