Wednesday, 31 October 2018

அபாயகரமான இணையதள விளையாட்டுகள் குறித்து கெம்பநாயக்கன்பாளையம் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அபாயகரமான இணையதள விளையாட்டுகள் குறித்து கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மற்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோமோ என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டை செல்லிடப்பேசியில் குழந்தைகள் விளையாடுவதால் விபரீதமான முடிவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனால் இதுகுறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கீதா மாணவர்களுக்கு இந்த விளையாட்டின் அபாயம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மோமோ என்ற அபாயகரமான இணையதள விளையாட்டை விளையாடக் கூடாது, இதனால் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செல்லாமல் எண்ணங்கள் சிதறிவிடும் என்று அறிவுறுத்தினார்.


மேலும், அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவ்வாறு வரும் அழைப்பு எண்களை தங்களது செல்லிடப்பேசியில் தொடர்பு பட்டியலில் சேமித்து வைக்கக் கூடாது என்றார். இதையடுத்து மோமோ என்ற அபாயகரமான இணையதள விளையாட்டைப் பற்றி நினைக்கமாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
source: தினமணி
  

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here