Sunday, 2 June 2019

ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு

கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில், "அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நாங்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டோம்.
அந்த சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பணி விதிகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தி அறிவிப்பாணை வெளியிட்டது.


இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர்களை மாநில மூப்பு அடிப்படையில் நியமிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.
 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக, கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி முதன்முதலாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதிக்கு பின்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் கிடையாது. எனவே கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர்.
 இந்த மனு நீதிபதி என.சதீஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 16-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரைத்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here