பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்கு வசதியாக இந்த மாத இறுதியில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகம் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனை இலவசமாக பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழங்கினார்கள்.இந்த வருடமும் தொற்று பாதிப்பு இருப்பதால் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பாக அச்சடிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. அதனை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பாடப்புத்தங்களை பெற்று பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாவட்ட குடோனில் இருந்து புத்தகங்களை வேனில் பள்ளிக்கு எடுத்து செல்கிறார்கள்.சென்னையில் பாடப்புத்தகம் எழும்பூர் மாநில மகளிர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட பாடப்புத்தங்கள் பாதுகாப்பாக அங்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பாடப்புத்தகங்களை பெற்று செல்கிறார்கள்.
தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருப்பதால் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் எப்போது வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்கு வசதியாக இந்த மாத இறுதியில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.ஒவ்வொரு வகுப்பிற்கும் எந்தெந்த நாட்களில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்? என்பது குறித்த தகவல்கள் பள்ளிகள் வழியாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா கூறியதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டங்களுக்கு பாடப்புத்தகங்கள் கடந்த 14-ந்தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. 395 தொடக்கப் பள்ளிகளுக்கும், 256 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து நெரிசல் இல்லாமல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.
-மாலை மலர்
No comments:
Post a Comment