Thursday, 14 December 2017

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்

பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 3 பெண்கள், ஆதார் விபரங்கள் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திராவையும், மற்றொருவர் தெலுங்கானாவையும், மற்றொருவர் ஈரோட்டையும் சேர்ந்தவர்கள்.

சேர்த்து வைத்த ஆதார் :


இந்த 3 பெண்களும் படிப்பறிவும், சைகை மொழிகளும் தெரிந்திருந்தும் அவர்களால் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சொல்ல முடியவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்திரிந்த இவர்களை அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரின் மீட்ட போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். பல வழிகளில் முயன்றும் அவர்களைப் பற்றிய விபரங்களை அறிய முடியாததால், இறுதியாக ஆதார் விபரங்கள் மூலம் அவர்களின் முகவரியை கண்டறிய காப்பக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மூலம் ஆதார் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 3 பெண்களின் கைரேகைகளும் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் ஆதார் அட்டை நகலை பதிவிறக்கம் செய்தனர். அதில் குறிப்பிடப்பட்ட நில குறியீடு மூலம் அந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் காணாமல் போனர்களின் விபரங்களையும், அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த பெண்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

மாயமான பெண்கள் :

காப்பகத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர் வெங்கடலக்ஷம்மா (45). இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணமான மகள் வீட்டிற்கு ரயிலில் ஏறியவர், தவறுதலாக சென்னை வந்துள்ளார். 2015 ம் ஆண்டு சென்னை பல்லிக்கரணை பகுதியில் இவர் சுற்றித்திரிந்துள்ளார். மற்றொருவரின் பெயர் பார்வதி (19). ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இவர், கூலி வேலை செய்யும் தாய்க்கு பாரமாக இருக்க வேண்டாம் என நினைத்து, சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அவர்களின் முகவரியோ, கையில் பணமோ இல்லாததால் பசியால் வாடிய நிலையில் வேப்பேரி போலீஸ் மூலம் இந்த காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பார்வதி இதற்கு முன் 5 முறை இப்படி வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும், வழக்கமாக ஓரிரு நாளில் கிடைத்து விடுவார் எனவும், இந்த முறையே பல வாரங்கள் ஆகி உள்ளதாகவும் அவரது தாய் தெரிவித்தார். மூன்றாவது பெண் சிந்தலா ரஞ்சிதா(27), தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், கணவனும் கை விட்டதால் கூலி வேலை செய்யம் தாயுடன் வசித்து வந்தார். வேலைக்கு சென்ற தாய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை தேடுவதற்காக வந்த போது, தொலைந்து போய் உள்ளார். இவர்களில் பார்வதி மட்டும் வீட்டிற்கு செல்ல விரும்பாததால், காப்பகத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவே முதல்முறை :

இச்சம்பவம் குறித்து தமிழக க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் தகிரா கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை காணாமல் போன 109 பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ இருப்பார்கள். ஆனால் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 பேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடன் மீண்டும் இணைவது இதுவே முதல் முறை என்றார்.
ஆதார் துணை இயக்குனர் கஜாரே கூறுகையில், இந்தியாவில் ஆதார் மூலம் 30 முதல் 40 பேர் ஆதார் மூலம் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். ஆனால் மாற்றுதிறனாளி பெண்கள் 3 பேர் ஆதார் மூலம் குடும்பத்துடன் இணைந்துள்ளது இதுவே முதல் முறை. அதுவும் தமிழகத்தில் ஆதார் கைரேகை மூலம் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்றார்.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here