Friday, 15 February 2019

அரசு பள்ளியில் துவங்கிய மழலையர் வகுப்பு ஆரம்பத்திலேயே அதிருப்தி! ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் கடுப்பு

அன்னுார் வட்டாரத்தில், அரசு பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டு, 25 நாட்களாகியும் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால், பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
அன்னுார் வட்டாரத்தில், மூன்று துவக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர்கள் உள்ளனர். 25 பள்ளிகளில், 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். பல நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்புகள் வரை, மொத்தமாக, 100 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.


இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., என்ற மழலையர் வகுப்புகள் துவக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதன்படி அன்னுார் வட்டாரத்திலுள்ள, 16 நடுநிலைப் பள்ளிகளில், 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

அ.மேட்டுப்பாளையம், வடக்கலுார், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட அந்த பள்ளிகளில் கடந்த, 21ம் தேதி எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்கின. சராசரியாக, 15 குழந்தைகள் எல்.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கப்பட்டன.அன்னுார் வட்டாரத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், உபரியாக இருந்த மூன்று ஆசிரியர்களும், வேறு ஒன்றியங்களிலிருந்து பிற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இடைநிலை ஆசிரியர்களை, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த தகுதி இறக்கம் செய்யக் கூடாது. குழந்தைகளுக்கு என மாண்டிசோரி படிப்பு படித்தவர்களை தான் நியமிக்க வேண்டும் என்று கூறியது.உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.இதையடுத்து, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தங்கள் முந்தைய வகுப்புகளுக்கு சென்று விட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு துவக்கப்படுகிறது என்று கூறியதால், குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்தோம். ஆனால், 24 நாட்கள் ஆகியும், பாடம் சொல்லித்தருவதில்லை.சீருடை, புத்தகம், நோட்டு தருவதாக கூறினார்கள். எதுவும் தரவில்லை. வழக்கமாக அங்கன்வாடியில் உட்காருவது போல் தான் குழந்தைகள் உட்கார்ந்து விட்டு வீட்டுக்கு திரும்பி வருகின்றனர். எந்த முன்னேற்றமும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வித்துறை தரப்பில் கூறுகையில், 'நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தற்காலிகமாக எல்.கே.ஜி., வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விரைவில் சீருடை, நோட்டுகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் தருவதாக தெரிவித்துள்ளது' என்றனர்.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here