Tuesday, 28 April 2020

35 மாணவர்களுக்கு தலா ரூ.1000: சொந்தப் பணத்தை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

 திருச்சி களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.


இதற்கிடையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமான தன்னார்வலர்கள், தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர். ஏராளமானோர் உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி தனது பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி, ''சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தியொன்றில் ஒருவர், 'என் பிள்ளைக்குத் தினமும் தீனி வாங்கித் தருவது வழக்கம். இப்போது வேலைக்குச் செல்ல முடியாததால் கையிலிருந்த பணம் செலவாகிவிட்டது. என் பிள்ளை கேட்பதை என்னால் வாங்கித் தர முடியவில்லை. கடை இல்லை என்று கூறி மகனைச் சமாளித்து வருகிறேன்.' என்று கூறினார்.

இதைக் கேட்டதும் துயரமாக இருந்தது. நம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கும் இந்நிலைதானே ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். மாணவர்களின் சிறு தேவையைப் பூர்த்தி செய்ய இத்தொகையை வழங்கத் திட்டமிட்டேன்.


-தி இந்து தமிழ் திசை - வெற்றிக்கொடி

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here