Sunday, 3 May 2020

கரோனா நிவாரணமாக மே மாத ஊதியத்தை வழங்குங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்

'இதுவரை உள்ள நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறு என்பதால் பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தைக் கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும்' என தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 26-8-2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் நிதியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.


இந்த அறிவிப்பின்படி பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் மே மாதத்தில் மட்டும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடாத போதும் கல்வித் துறை அதிகாரிகள், பகுதிநேர ஆசிரியர்களின் மே மாத ஊதியத்தை கடந்த 8 ஆண்டுகளாகப் பிடித்தம் செய்து வருகிறார்கள். இதனால் அந்த ஆசிரியர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பச் சூழல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஒரு மாத ஊதியம் இல்லாவிட்டால் எதிர்வரும் மாதத்தில் எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று அவர்கள் இடிந்து போயுள்ளனர்.
எனவே, இந்த கஷ்டமான நேரத்தில் மே மாத ஊதியத்தைக் கொடுத்தால் அது தங்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும் என அவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், "2012-ம் ஆண்டு நியமனம் செய்த 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது 12 ஆயிரம் பேர் அதே பணியில் தொடர்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற மே மாத ஊதியமான 7,700 ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதற்காக சுமார் பத்து கோடி ரூபாய் தேவைப்படும். இதை ஊதியமாகக் கருதாமல், கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கான நிவாரணமாகக் கருதியாவது வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இக்கட்டான நேரங்களில் எல்லாம் நாங்கள் அரசுக்கு உறுதுணையாக நிற்கிறோம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் எங்கள் விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்து எங்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்கிட ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

- கரு.முத்து தமிழ் தி இந்து திசை - வெற்றிக்கொடி 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here