Monday, 14 June 2021

பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சமீப நாள்களாக பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்குவர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கலாம் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மனோகரன், பள்ளிக்கல்வித்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தற்போது மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என கூறியதோடு அதில் உள்ள சவால்களையும், பிரச்சினைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், “தலைமையாசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் வரை 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும். பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் பாடப்புத்தகம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் தெளிவான நிலை இல்லை. பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் பெண்களாக இருக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாகும்.மேலும் மாணவர் சேர்க்கையை, ஆசிரியர்கள் அனைவரும் இருந்து கலந்து நடைமுறைப்படுத்துவது தான் வழக்கம். தற்போது, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதைப் போலவே, மாணவர்களும் தங்கள் பெற்றோரும் பொதுப்போக்குவரத்து இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்வது கடினம்.

மேலும் மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்போடு நடைபெற வேண்டுமென்றால், தொற்று குறைந்து ஊரடங்கும் முடிவுக்கு வரவேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். அதன்பின் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பதுதான் அனைவருக்கும் உகந்தது மற்றும் பாதுகாப்பானது. அதனால், தொற்று குறைந்து ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here