Monday, 2 May 2022

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது என்றார்.




கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான சாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது, திருநெல்வேலியில் சாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை மாடலாக கருதக்கூடாது என்றும் இளம் கன்று பயமறியாது என்பதை மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்குவதில் காட்டக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து வருவதாக கூறிய அவர், மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொது இடங்களில் மாணவிகள் மோதிக்கொண்டது மன அழுத்தத்தின் காரணமாக மோதிக்கொண்டார்களா? அல்லது ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது. இது மாதிரியான சம்பவங்களை தடுக்க யுனிசெப், நலம்தாவை என்ற அமைப்பு மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்குற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

-News7tamil

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here