Sunday, 24 December 2017

10 நாட்கள் புத்தாக்க பயிற்சி நிறைவு: கல்வியால் மட்டுமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் கலெக்டர் பேச்சு

கல்வியால் மட்டுமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், 10, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத்தை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 11ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. அதில், நடிகர் தாமு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாம் நாள் நிகழ்ச்சி, தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வரவேற்றார்.


இதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:

இந்த சமுதாயம் ஆசிரியர்களால் உருவாகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு புத்துணர்சி அளிக்க வேண்டியதும், ஆற்றலூட்டும் பயிற்சி முகாம் நடத்துவதும் அவசியமாகிறது. இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

எந்த மாற்றத்தையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு நீண்ட உழைப்பு அவசியம். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சாவி ஆசிரியர்களிடம் இருக்கிறது. மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த கல்வியால் மட்டுமே முடியும்.

அதேபோல், ஒரு பள்ளியின் தேர்ச்சி குறைவுக்கு ஆசிரியர், மாணவர், பெற்றோர், நிர்வாகம் என யார் காரணமாக இருந்தாலும், அதை சரி செய்யும் ஆற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே இருக்கிறது. ஆசிரியர்கள் முயன்றால், கல்வியின் தரம் உயரும். திருவண்ணாமலை மாவட்டத்தின், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், அனைத்து நிலைகளிலும் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 10, பிளஸ் 2 தேர்வு முறை நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது.

ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் கடைசி இடத்திலும், கடைசி இடத்தில் இருந்து சில இடங்கள் முன்னேறுகிற நிலையில் இருப்பதும் வருத்தமாக இருக்கிறது. மாநில அளவில், இந்த மாவட்டம் முதலிடம் பெற ஆசிரியர்கள் உறுதியேற்று உழைக்க வேண்டும்.கல்வியின் தரம் மேம்பட, கலெக்டர் மேற்கொண்டுள்ள முயற்சியின் பயனாக, இந்த கல்வி ஆண்டில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடங்களை பெறும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here