Saturday, 16 December 2017

திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத புதிய பள்ளி கட்டிடம்

கடந்த 6 மாதங்களுக்கு முன் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் ஊராட்சியில், அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி உயர்நிலை
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கல்குணம், டி.வி.நல்லூர், ரெட்டிப்பாளையம், பூதாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி இரண்டும் பழைய பள்ளி வளாகத்திலேயே இயங்கி வந்தது. 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார்.


இதன் பின்னர் புதிதாக தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாமல், இடம் காலியாகவே உள்ளது. உயர்நிலை பள்ளியும், தொடக்க பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருவதால், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி செலவில் 2011-12ம் ஆண்டில் வகுப்பறைகள், நூலகம், ஆய்வு கூடம், கணினி அறை, தலைமையாசிரியர் அறை, கழிப்பறை ஆகியவை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் மாதம், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் திறப்பு விழா முடிந்து 6 மாதங்களாகியும் இதுவரை புதிய பள்ளி கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பழைய கட்டிடத்திலேயே பாடம் நடத்தப்படுகிறது.

புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்திற்கு அருகில், செங்கால் ஓடையிலிருந்து பிரிந்து வரும் கிளை ஓடை மற்றும் வயல் வெளிகள் இருக்கிறது. மழை காலங்களில் ஓடையின் வழியே வரும் வெள்ள நீர், பள்ளிக்குள் புகும் அபாயம் உள்ளது. வயல்கள் இருப்பதால், மாணவர்கள் இடைவெளியின் போது அங்கு செல்வார்கள். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். புதிய பள்ளி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,  என மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-தினகரன்

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here