Saturday, 16 December 2017

விருத்தாசலம்: தலைமையாசிரியை விருப்ப ஓய்வில் செல்ல எதிர்ப்பு

விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 152 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை தமிழ்செல்வி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தலைமையாசிரியை தமிழ்செல்விக்கும், மற்றொரு ஆசிரியைக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த ஆசிரியை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் காரணமாக நேற்று முன்தினம் விருத்தாசலம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவழகன், சந்திரலேகா ஆகியோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமையாசிரியையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


மீண்டும் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்த இருப்பதாக கூறிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில், தலைமையாசிரியை தமிழ்செல்வி, ஆசிரியை பணியை விட்டுவிட்டு எழுத்தாளர் பணியில் ஈடுபட போவதாகவும், அதனால் கல்வித்துறை அதிகாரிகளிடம் விருப்ப ஓய்வு மனு கொடுத்துள்ளதாகவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர், மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் இத்தகவலை கூறியுள்ளனர். நேற்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை, இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனை மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கல்விப்பணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனக்கூறி தங்களது பெற்றோர்களுடன் விருத்தாசலம்-சிதம்பரம் சாலை கோ.ஆதனூர் பேருந்து நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here