Tuesday, 26 December 2017

திருப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள திருப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில தலைவர் சீனிவாசன், பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாவட்ட அளவில் திருப்பு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அரசு விதிகளின்படி, கற்றல் கற்பித்தல் 183 நாட்கள் ஆகும். அதேபோல் 24 நாட்கள் மட்டுமே தேர்வு நடத்தப்படும். ஆனால் சமீபகாலமாக கற்றல் கற்பித்தல் நாட்கள் குறைக்கப்பட்டு, தேர்வுக்கான நாட்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. டிசம்பருக்குள் முழு பாடங்களையும் முடிக்க வேண்டும் என மாதாந்திர பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபட, ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டது வெறும் 94 நாட்கள் மட்டுமே. இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், கற்றல் கற்பித்தலில் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதிலும் ஒரு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 18ம் முதல் 31ம் தேதி வரை மாநில அளவிலான திருப்பு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டு, அதற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது. இதுபோன்று தொடர்ந்து தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான இடைவெளி அதிகரிப்பதுடன், இது மன உளைச்சலை ஏற்படுத்தும். 180 நாட்களில் நடத்தப்பட வேண்டிய பாடத்தை, 100 நாட்களில் நடத்த ஆசிரியர்கள் தள்ளப்படும் போது, மேலோட்டமாகத்தான் கற்பிக்க முடியுமே தவிர, ஆழ்ந்து கற்பிக்க முடியாது. மேலும் மாணவர்களும் ஆழ்ந்த பாட அறிவை பெற இயலாது. மாணவர்களை இயந்திரங்களாக பாவித்து, தேர்வுகள் வைப்பது அவர்களின் கற்றல்பணியை எவ்விதத்திலும் மேம்படுத்தாது.

அரையாண்டு விடுமுறைக்குபின், அதற்கான விடைத்தாள்களை வழங்கி, மாணவர்கள் செய்துள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதை எவ்வாறு களையமுடியும் என முதுகலையாசிரியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும். குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தால் ஜனவரி 2 முதல் 13ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள, திருப்புத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-தினகரன் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here